முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி நிகழ்ச்சியில், மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாவை நுழைவாயிலில் இருந்தவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
இதேபோல், கருப்பு நிறத்திலான குடை, கைப்பைகள் உள்ளிட்டவற்றையும் விழா அரங்கிற்கு வெளியே வைத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, விழா முடிந்து வெளியே வந்த போது கருப்பு நிற துப்பட்டாக்கள் மாணவிகளிடம் திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற துப்பட்டாக்களுக்கு விழா அரங்கிற்குள் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என மாணவிகள் கூறியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விலேயே மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நன்றி - புதிய தலைமுறை தொலைக்காட்சி