சென்னையில் பலரும் தங்கள் வீடுகளில் நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்பம் இருந்தாலும் அவற்றை எப்படி வாங்குவது என்ற நடைமுறை சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக இணையதளங்களில் சமூக ஊடகங்களில் விசாரிப்பதும் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமில்லாமல், சென்னையில் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் நாய், பூனை ஆகிய பிராணிகள் நிறையவே உள்ளன. அவற்றை வளர்க்க வேண்டும் என்று பிராணிகள் மீது அன்புள்ளம் கொண்ட நிறைய பேர் இருக்கவே செய்கின்றன. அவர்களும் அப்படி கைவிடப்பட்ட பிராணிகளை எப்படி தத்தெடுத்து வளர்ப்பது என்ற வழி தெரியாமல் உள்ளனர்.
இவர்களுக்காக இந்திய புளு கிராஸ் அமைப்பு சென்னை அண்ணா நகரில் உள்ள வி.அர். மாலில் நவம்பர் 17 ஆம் தேதி செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்சியில் கைவிடப்பட்டு தெருக்களில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நாய், பூனை குட்டிகளை மீட்டு பராமரித்து தத்தெடுக்க வருபவர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு நிகழ்ச்சியில் 30 முதல் 50 நாட்கள் வயதுள்ள நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்லப் பிராணிகளை தத்தெடுப்பவர்களுக்கு மருத்துவர்கள் அவற்றுக்கான உணவுமுறை, மருத்துவ தேவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவார்கள்.
கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்க்க விருப்பம் இருந்தாலும் நடைமுறை சிக்கல் காரணமாக உங்களால் அவற்றை தத்தெடுக்க முடியவில்லை என்றால் அவற்றைப் பராமரிக்க நீங்கள் நன்கொடை அளிக்கலாம். அந்த நன்கொடை இந்திய புளு கிராஸ் அமைப்பின் மையத்தில் பராமரித்துவரும் கைவிடப்பட்ட செல்ல பிராணிகளுக்கு உதவியாக இருக்கும்.
இந்திய புளு கிராஸ் அமைப்பு கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளை மீட்டு பராமரித்து அவற்றை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள மால்களில் தொடர்சியாக நடத்திவருகிறது.