வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பழங்கால விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
சென்னையில் மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பொதுமக்களை கவரும் வகையில் மெட்ரோ நிர்வாகம் ஏதாவது புதிய முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. ஃபுட் ஃபேஸ்டிவல், வாடகை சைக்கிள், இலவச மெட்ரோ சேவை என சமீபத்தில் மெட்ரோ நிர்வாகம் கையாண்ட அனைத்து புதுமையான விஷயங்களும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
அந்த வகையில் தற்போது மெட்ரோ நிர்வாகம் அடுத்ததாக கையாண்டுள்ள புதிய முயற்சி தான் பழங்கால விளையாட்டு போட்டி. இன்றைய தலைமுறையில் இருக்கும் பிள்ளைகளிடம் சென்று, அவர்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை வரிசையாக சொல்லுங்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில். ப்ளே சேஷன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட் ஃபோன் கேம்ஸ் அதையும் மீஞ்சினால் கிரிக்கெட், ஃபுட் பால், கபடி.
ஆனால் உண்மையில் நம் நாட்டில் விளையாடப்பட்ட பழங்கால விளையாட்டுக்கள் ஏராளம். பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நக்ஷத்ரா போன்ற பல விளையாட்டுகளின் பெயர்கள் கூட இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. இதை சரிசெய்யும் விதமாக இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
வரும் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரையில் நந்தனம், கிண்டி, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், விமான நிலையம், வடபழனி, அண்ணாநகர், பச்சையப்பன் கல்லூரி, சென்ட்ரல், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ், கோயம்பேடு, எழும்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட 26 மெட்ரோ ரயில் நிலையங்களில் பழங்கால விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரைலும் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று நேரிலும் காணலாம்.