வெடிகுண்டு மிரட்டல் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவரது வீட்டில் மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
முதலமைச்சர் பழனிசாமியின் வீடு சென்னை க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய ஒருவர், முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். முதல்வர் எடப்பாடி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அதில், வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது பொய்யான தகவல் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியவர் யார், எங்கிருந்து பேசினார் என தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக போலீசார் பிடித்தனர். அவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பெயர் சுந்தர் ராஜன் என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.