/indian-express-tamil/media/media_files/AYIQz84sF3sbdomEXFAc.jpg)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் விஜய் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்தபோது அருண், விஜய் வீட்டில் வெடிகுண்டு ஏதேனும் வைத்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் குழு விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார். அவர் அண்மையில் திருச்சி, அரியலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, நாளை நாகப்பட்டினத்தில் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் பயணங்களுக்கு மத்தியில், அவரது வீட்டில் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அருண் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், விஜய் வீட்டிற்குள் வேறு ஏதேனும் மர்மப் பொருட்கள் இருக்கிறதா என்பதை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் முடிவுகள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.