சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி மைதிலி (64) வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவரது கணவர் ஜெயக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக வந்தவாசியில் வசித்து வருகிறார். மைதிலியின் மகள் ரித்திகா (24) போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரித்திகாவும் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவரும், கல்லூரியில் படித்த ஜூனியர் மாணவருமான ஷியாம் கண்ணன் (22) என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஷியாம் கண்ணன் ரித்திகாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்து மகளின் காதலுக்கு மைதிலி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்ற ரித்திகா நேற்று இரவு தாமதமாக வீடு திரும்பியுள்ளார். இதனை மைதிலி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ரித்திகா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு, தனது காதலன் ஷியாம் கண்ணனுக்கு போன் செய்து வரவழைத்து அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். மகளைத் தேடி சாலைக்கு வந்த மைதிலி, அங்கு ஷியாம் கண்ணனுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது, ஷியாம் கண்ணனும் அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ரித்திகாவிற்கு தாய் மைதிலி அறிவுரை கூறும்போது, மீண்டும் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. காதலியை திட்டியதால் ஆத்திரமடைந்த ஷியாம் கண்ணன், மைதிலியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்பு, அவரே ஜேஜே நகர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து ரித்திகாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.