/indian-express-tamil/media/media_files/nXgDVtsp8XH2WpP0lS5b.jpg)
கோவை ஆர்.எஸ்.புரம், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.ஜே. ஜிஜான்(41). இவர் மனைவி டின்னி ஜிஜான் மற்றும் தந்தை V.P. ஜான் அவர்களுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 19.09.2023-ம் தேதி காலை 6.00 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்த போதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த செப்.20-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி டின்னி ஜிஜான் மற்றும் அவரது தந்தை வி. பி.ஜான் ஆகியோர் ஜிஜான் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/h3JLyNWw6whELebECp6s.jpeg)
ஒரு ("சிறுநீரகம்") அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அதே தனியார் மருத்துவமனைக்கும், (இதயம், ஒரு சிறுநீரகம், கண்கள்) கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. தனியார் மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தனியார் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றார். உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த ஜிஜான் குடும்பத்திற்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.