கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய்த் தொறுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரம் உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது
இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
”முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ், என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும். இதற்கு மூளைக்காய்ச்சல் போன்ற தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.
கேரளாவில் இருந்து சமீபத்தில் பதிவாகும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
தேங்கி நிற்கும், மாசுபட்ட அழுக்கு நீரில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்க கூடாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும்.
தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். பொது சுகாதார வழிகாட்டுதல்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.
இந்த சூழலில் உயிரினம் உயிர்வாழ முடியாது என்பதால், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2 பிபிஎம்க்கு மேல் குளோரின் அளவை சம்பந்தப்பட்ட உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்”, என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
எடப்பாடி பழனிசாமி தனது X பக்கத்தில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.
அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“