கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை ஊரக பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ‘பிரீத் தமிழ்நாடு’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மருத்துவதுறையைச் சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் கோவிட் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவிட் இந்தியா பிரச்சாரத்தை ஐசிஏடிடி அமைப்பு மற்றும் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இயக்கம் கூடுதலாக, உள்ளூர் தலைவர்களின் உதவியுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் படுக்கை வசதிகளையும் ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் இந்த இயக்கம் கொரோனா தடுப்பில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு இடையே பாலமாக செயல்படுகிறது.
சமுதாய ஆக்ஸிஜன் மையம் எனும் பெயரில் இதுவரை இந்த இயக்கம் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார், தெள்ளார் மற்றும் காரப்பட்டு பகுதிகளில் நிறுவியுள்ளது. அதே நேரம் இந்தியா முழுவதும் மே மாதத்தில் மட்டும் 17 சமுதாய ஆக்ஸிஜன் மையங்கள், கோவிட் இந்தியா பிரச்சாரம் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் உள்ளூர் அமைப்புகளின் உதவியோடு, ஊரகப் பகுதிகளில் ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு உதவுகிறது. இது ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மருத்துவ தேவைகளின் அவசியத்தையும், உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதையும் அங்குள்ள சமூக அமைப்புகளுக்கு சுட்டிகாட்டுகிறது.
மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளின் காலியிடங்கள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.
இந்த இயக்கம் அடுத்ததாக ராணிப்பேட்டை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கவனம் செலுத்த உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil