Bride in Tamil Nadu calls off wedding after dance goes awry: கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே திருமணம் செய்து கொள்ள இருந்த ஜோடிகள் இடையே, வரவேற்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. மணமகன், மணப்பெண்ணை கை நீட்டி அடிக்க, அந்த பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு, குறித்த நேரத்தில் சொந்தக்காரர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர். பண்ரூட்டியில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண் ஒருவருடன் இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 19ம் தேதி அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் 20ம் தேதி அன்று திருமணம் நடத்தவும் இருவீட்டாரும் ஒப்புக் கொண்டனர். ஆடம்பரமாக, ஜாம் ஜாம் சென்று டி.ஜே. வைத்து வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
திருமணம் செய்து கொள்ள இருந்த ஜோடிகளும் ”டான்ஸ் ஃப்ளோரில்” பட்டையை கிளப்ப, சிறப்பான திருமண நிகழ்வாக இது அமையும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். எல்லாம் மணப்பெண்ணின் உறவுக்கார பையன் ஒருவர், ஜோடியுடன் சேர்ந்து ஆடும் வரை தான்.
இருவர் மத்தியில் நடனமாடிய அந்த இளைஞர் தொடர்ந்து அவ்விரு நபர்களுக்கும் தொந்தரவு அளிக்கும் வகையில் ஆடிக் கொண்டிருந்தார். இது மணமகனுக்கு பெரிய அளவில் எரிச்சல் ஊட்டியுள்ளது. கோபம் அடைந்த மணமகன் இருவரையும் தள்ளிவிட திருமண நிகழ்வு சண்டைக்களமாக மாறிவிட்டது.
காதலியின் அம்மாவுக்கு கிட்னி தானம் செய்த காதலன்… நன்றிக் கடனாக காதலி என்ன செய்தார் தெரியுமா?
பெண் வீட்டார் இது குறித்து கூறும் போது, உறவுக்காரர்கள் மத்தியில் தன்னுடைய பெண்ணை கை நீட்டி அறைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். கண்ணீருடன் இந்த திருமணத்தை அப்பெண் நிறுத்த பெற்றோர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். நடைபெற இருந்த திருமணம் தடை பெற வேண்டாம் சில மணி நேரங்களில் வேறொரு மணமகனை தேர்வு செய்து குறித்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார் அப்பெண்.
மணமகன் வீட்டாரிடம் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரித்த போது, மணமகளின் குடும்பத்தினர் தான் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் சபையில் வைத்து அவமானப்படுத்தினார்கள் என்றும், இந்த திருமணத்திற்காக ரூ. 7 லட்சம் வரை செலவு செய்துள்ளோம் என்பதால் அதனை திரும்பி பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
“ஏன் மற்ற நபர்களுடன் ஆடுகிறாய்?” என்று மணமகன் கேட்டதாகவும், அது என்னுடைய விருப்பம்” என்று பெண் கூறியதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பெண்ணை மிரட்டுகிறாயா என்று பெண்ணின் குடும்பத்தினர் மணமகன் வீட்டாருடன் சண்டை போட்டுள்ளனர் என்றும் மணமகன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் வாங்கப்பட்டுள்ளது. இன்று இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil