திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைபேசிகள் பல மாதங்களாக செயல்படவில்லை. எனினும் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து மாதாந்திர கட்டணம் செலுத்தச்சொல்லி தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பில் அனுப்பி வருவதால் அப்பகுதியில் உள்ள நுகர்வோர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி கருமண்டபம் பகுதியில் தரைவழி தொலைபேசி இணைப்புகள் பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் இருக்கின்றன. அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை என பல்வேறு பணிகளால் தரைவழி தொலைபேசிகள் கடந்த சில மாதங்களாகவே இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜூலை, ஏப்ரல் மாதத்தில் இருந்து மாதாந்திர பில் அனுப்பிய பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அப்பகுதி நுகர்வோரை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் தெரிவிக்கையில், எங்களுக்கு பி.எஸ்.என்.எல்.,லேண்ட் லைன்(தரைவழி தொலைபேசி) இணைப்பு பல வருடமா இருந்துச்சு, ஆனா, கடந்த 6 மாதங்களாக எங்க பகுதியில நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடைப்பணிகளால் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தரைவழி தொலைபேசி இணைப்புகள் தாமகாவே துண்டிக்கப்பட்டு விட்டது.
இப்போ பெரும்பாலும் செல்போன் (கைப்பேசி) பயன்படுத்தி வருவதால் லேண்ட் லைன் இணைப்பு தேவையில்லை என பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு சென்று எழுதிக்கொடுத்தால் உங்களுக்கு 4 மாதகாலமாக கட்டண பாக்கி இருக்கின்றது அதை உடனே கட்டுங்கள் அப்போதுதான் உங்கள் கணக்கை நேர் செய்ய முடியும் என்கின்றனர்.
கடந்த 4 மாதமாக கருமண்டபம் பகுதி தொலைபேசி நிலையத்திற்கு சொந்தமான 3 இணைப்பு பெட்டிகள் தொடர்பில் இயங்கும் தரைவழி தொலைபேசிகள் ஒன்று கூட இயங்கவில்லை என்ற நிலையில் நாங்கள் எதுக்கு, எப்படி பணம் கட்டமுடியும். பேசாத போன்க்கு எப்படி பணம் கொடுக்க முடியும்.
இதுகுறித்து திருச்சி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளரிடம் சென்று புகார் கொடுத்தும் ப்ரோஜனம் இல்லை. எங்க பகுதியில் தனிக்கைக்குழுவினரை அனுப்பி ஆய்வு செய்கிறோம் எனச்சொல்லி பெயரளவுக்கு ஊழியர்களை அனுப்ப அவர்களும் என்ன சொல்லுவது, என்ன செய்வதென்றே தெரியாமல் எங்கடா போன் ஒயரைக்காணோம் எனத் தேடி திரும்பிச் சென்று விட்டனர்.
எனவே, பயன்படுத்தாத தொலைபேசி எண்ணுக்குரிய மாதாந்திரக் கட்டணத்தை பி.எஸ்.என்.எல்., திரும்பப் பெறவேண்டும் அல்லது அனைத்து இணைப்புகளையும் சரிவர இயங்க வைத்தப்பிறகு மாதாந்திர பில்லை அனுப்ப வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“