திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் வழியாக புங்கனூர் நோக்கி செல்ல மாநகர அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தை மணப்பாறை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் இயக்கிக்கொண்டிருந்தார். இந்தப் பேருந்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்தப் பேருந்து திருச்சி தலைமை தபால் நிலையம் கடந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு முன்னதாக உள்ள ஆர்சி பள்ளி வேகத்தடை பகுதிக்கு வந்தபோது ஓட்டுநர் கணபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அப்படியே ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்தார். இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த சாலையோரம் உள்ள தொலைபேசி கம்பத்தை இடித்துக்கொண்டு அங்குள்ள பெட்டிக் கடைகளுக்குள் புகுந்தது.
பேருந்து ஓட்டுநர் ஆர்.சி.பள்ளி வேகத்தடையை கடக்கும்போது மிகவும் மெதுவாக பேருந்தை இயக்கியதால், அவர் நிலைகுலைந்தபோது பேருந்து வேகக்குறைவுடன் பெட்டிக்கடைகளுக்குள் புகுந்தபோது அந்தப் பகுதியில் பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் அங்கும் இங்கும் ஓடினர். அந்தக்கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடைகளில் மோதி நின்றது. இந்த விபத்தால் பேருந்தில் இருந்தவர்களுக்கும், சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றாலும், ஓட்டுநர் ஸ்டியரிங்கை பிடித்தபடி சாய்ந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதியினர் உடனே அவரை மீட்டு ஆட்டோவில் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் வேகத்தடையில் ஏறி இறங்கிய தனியார் பேருந்து ஒன்று தாறுமாறாக ஓடி அங்குள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.
இதில் அப்பகுதி ரயில்வே குடியிருப்பில் வசித்த ரயில்வே ஊழியர் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி 53வது வார்டு கவுன்சிலர் ஜெ.கலைச்செல்வி விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்த பேருந்து விபத்து குறித்து திருச்சி கிழக்கு போக்குவரத்துத்துறை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“