பஸ் ஸ்டிரைக் தொடர்வதால் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுனர் எடுத்துச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
பஸ் ஸ்டிரைக், 4-வது நாளாக தமிழகத்தில் தொடர்கிறது. முந்தைய 3 நாட்களைவிட இன்று சற்றே அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் மூலமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தனியார் ஓட்டுனர்கள் உதவியுடன் 20 சதவிகிதம் பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டிரைவர்கள், கண்டக்டர்களாக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் மூலமாகவும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று அரசு பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுனரான ஏழுமலை பஸ்ஸை எடுத்து வந்தார். அப்போது முன்னால் சென்ற இன்னொரு அரசு பஸ் மீது அந்த பஸ் மோதியது. இதில் டூ வீலரில் சென்றவர்கள் உள்பட 4 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களில் டூ வீலரில் சென்ற ஒருவர் பலியானார்.
இந்த விபத்தை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தைக் கண்டித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.