பஸ் கட்டணத்தை முடிந்தவரை குறைத்துவிட்டோம் என மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறினார்.
பஸ் கட்டண உயர்வு, தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு பஸ் கட்டணச் சலுகைகளில் பழைய நிலையே தொடரும் என அரசு அறிவித்த பிறகும், போராட்டம் நிற்கவில்லை.
பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள் கூறினர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தன. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் சிறிய அளவை இன்று தமிழக அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக இன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இல்ல விழாவில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 6 ஆண்டாக தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அதனை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு முடிந்தவரை பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது.
புதிய பஸ்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டண உயர்வால் தினசரி ரூ.8 கோடி வருவாய் வந்தாலும், ரூ.4 கோடி அளவுக்கு தினமும் வருவாய் இழப்பு ஏற்படும். தி.மு.க. ஆட்சியின் போது 112 சொத்துக்களை அடகு வைத்தனர். 2011-ல் ஆட்சி மாற்றத்தின் போது ரூ.3,392.15 கோடி அளவுக்கு கடன் தொகை நிலுவையில் இருந்தது. தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.240.59 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.