தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் என 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.30 வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விடுத்துள்ள விளக்கத்தில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டம் செல்லக்கூடிய பயணிகளுக்கு பயண தூரம் குறைவதால் கட்டணம் குறைக்கப்பட்டது. சில வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் பயண கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசுவிரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலம் சென்றுள்ளனர்.
அதாவது, சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
ரயில்களில் சென்றவர்களையும் பார்க்கும்போது மொத்த எண்ணிக்கை 8.5 லட்சமாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“