பஸ் ஸ்டிரைக்-கிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 8-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
பஸ் ஸ்டிரைக், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், இந்தப் போராட்டம் நடக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை. #BusStrike pic.twitter.com/9tqhtBVTbA
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 5, 2018
பஸ் ஸ்டிரைக்கால் பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போக்குவரத்து சங்கங்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்டு போக்குவரத்தை சீரடைய உரிய உத்தரவிட வேண்டும் என வராகி என்பவர் வழக்கு தொடர்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், ‘புதிய ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக 10 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புதிய ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் தொடக்க நிலை ஊழியர்கள் 25 ஆயிரம் ரூபாயும், மூத்தநிலை ஊழியர்கள் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவார்கள்.
இதனால் ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் 2.44 காரணி மடங்குகள் ஊதிய உயர்வு அளிக்க அரசு முன்வந்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதிய ஒப்பந்தத்தை 32 சங்கங்கள் ஏற்று கையெழுத்து இட்டுள்ளன.14 சங்கங்கள் மட்டுமே ஏற்றுகொள்ளவில்லை’ என தெரிவித்தார்.
மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், ‘முன் அறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ‘போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு தடை விதிக்கபடுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலைக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் அதற்கான விளைவுகளை அவர்களே சந்திக்க வேண்டும்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு திரும்பாதவர்களை பணிநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என உத்தரவிட்டனர்.
ஏற்கனவே அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் படி செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தின் ஈடுபட்ட போது நீதிமன்றம் பல அறிவுரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்கி உள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள் அதன்படி போக்குவரத்து பணிகளும் அத்தியாவசிய பணிகளில் உள்ளதால் உடனடியாக தொழிலாளர் பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர். மேலும் மனு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்கள் வரும் திங்கள்கிழமை (8-ம் தேதி) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவு தொடர்பாக ஆலோசனை நடத்திய தொழிற்சங்கங்கள், ‘போராட்டத்தை தொடர இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம். 8-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்வோம்’ என கூறினர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்வதால், அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தெட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று, ‘இனி சட்டவிரோத வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம்’ என உத்தரவாதம் வழங்கி வேலையை திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.