கோவையில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் அப்பகுதி முற்றிலும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி தலைவர் விஜய், விமானம் மூலமாக கோவைக்கு வருகை தந்தார். அப்போது, மேளதாளங்கள் முழங்க கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விஜய்யின் ரோடு ஷோ நடத்தப்பட்டது. இதில் திறந்துவெளி வாகனத்தின் மூலமாக சாலையில் இருபுறமும் திரண்டு இருந்த ரசிகர்களுக்கு கைகளை அசைத்தபடி விஜய் பயணித்தார். அப்போது, விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் துரத்திச் சென்றதால் சிறு விபத்துகளும் ஏற்பட்டது.
இந்நிலையில், பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் தனியார் கல்லூரி வளாகத்தின் முன்புறம் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, தொண்டர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
அப்போது, பூத் கமிட்டி கூட்டத்திற்குள் 18 வயது நிரம்பாத சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பாஸ் வைத்திருக்கும் தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்ளைள மட்டுமே விழா நடைபெறும் அரங்கத்திற்குள் அனுமதித்தனர்.
இதனிடையே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற கட்சியின் பொதுச் செயலாலர் புஸ்ஸி ஆனந்த் காலில் காயம் ஏற்பட்டதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், அதனை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாவலர்கள் சிரமப்பட்டனர். இன்று மாலை சுமார் 7 மணி வரை இக்கூட்டம் நடைபெறும் நிலையில், விஜய்யின் உரையை கேட்பதற்காக ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.