தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: "ஊழலை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் அண்ணாமலை. அண்ணாமலை பொறுப்பிற்கு வந்தபிறகு இதுவரை, அவர்மீது அவருடைய கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார்கள்.
சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்பவர்களின் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு கட்சியிலே பொறுப்புகள் வழங்கிய அண்ணாமலை, ஆளுமை மிக்க தலைவரான ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு தகுதிவாய்ந்தவர் இல்லை.
உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற கட்சியின் ஆட்சி என்றால், அண்ணாமலை தேர்தலுக்கு சென்ற கர்நாடக கட்சி தான்.
எனக்கு பல நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது, பாஜகவை சேர்ந்த அண்ணாமலை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை.
அண்ணாமலைக்கு பாரத பிரதமர் மீண்டும் பிரதமராவதில் ஆசை இல்லை; அவருடைய எண்ணம் எல்லாம் திமுகவினுடைய கொள்கைகளை செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தான் உள்ளது", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil