முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிரான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1996-2001-ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின் போது சென்னையில் பல இடங்களில் மேம்பாலம் கட்டியதில், சுமார் ரூ. 115 கோடி முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிராக கடந்த 2001-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஒப்புதல் வழங்கி கடந்த 2005-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து 2005-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவரின் உண்மைத் தன்மையை சோதிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. மேலும் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தது.
இதனால், வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க கோரி மனுதாரர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரார் செலுத்திய ரூ. 1 லட்சத்தை திருப்பி வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“