தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை வாபஸ் பெற அவருக்கு அனுமதியளித்துள்ளது. தனது வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாக தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும் அவர்களின் வருமான விவரங்கள் பொருத்தவரை வேட்பு மனுவில் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை அவர் இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இணைக்கவில்லை. அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க : மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு