திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதியன்று திருச்சி சிவாவின் மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், திருச்சி மேற்கு தாலுக்கா அலுவலகம் எதிரில் சிலருடன் இணைந்து கடுமையாக தாக்கியதாகவும், அதில் மயக்கம் அடைந்த விஜயசாரதி திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நடந்த விவரத்தை கூறியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து யாரிடமும் முத்துக்குமார் பெயரைச் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி அன்று முத்துக்குமார் உட்பட நான்கு பேர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பேரில் அவர்களை கைது செய்ய போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முத்துக்குமார், உட்கட்சி பிரச்சினை காரணமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும்,
இருசக்கர வாகனத்தைத் திருடியவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது தானும் உடன் சென்றதாகவும தெரிவித்துள்ளார். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் தனது மாமனார் வீட்டின் மீது நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கில் அந்த காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வண்டியை திருடியவன் மீது ஒரு வழக்கு, பிடித்துக் கொடுத்தவன் மீது ஏழு வழக்கு, எங்கள் வீட்டை தாக்கியவர் மீது என்ன வழக்கு இது நகைச்சுவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையை நாடியபோது ஜூன் இரண்டாம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி பின் ஜாமின் மனு தாக்கல் செய்யு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி எம்பி சிவா வீட்டினை தாக்கிய போது, இந்த விவகாரம் தொடர்பாக அவரது மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமார் தனியாக ஒரு வழக்கினை தொடர்ந்த செய்த நிலையில், தற்போது முத்துக்குமார் மீது அதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.