கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடலை அடக்கம் செய்ய காவல்துறை பாதுகாப்பு கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாத்த தமிழகத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர். அப்போது, மருத்துவர்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிலர் இறந்துள்ளனர். அப்படி பலியானவர்களின் உடலை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அடக்கம்
செய்ய முடியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
கடந்த 13-ந்தேதி கொரோனா தொற்றால் இறந்த ஆந்திராவைச் சேர்ந்த டாக்டரின் உடலை அம்பத்தூர் மயானத்தில் அடக்கம் செய்யவிடாமல் ஒரு கும்பல் தடுத்துள்ளது. அதேபோல, கீழ்பாக்கம் மயானத்தில் பிரபல நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலீஸ் என்பவரது உடலை அடக்கம் செய்யவிடாமல், ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற நிலை நீடித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாக்கும். எனவே, கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மரணமடையும் நபர்களின் உடலை அடக்கம் செய்யவும், அவர்களது உறவினர்களுக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர், ‘ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை எடுத்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இந்த வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Case filed seeking protection to burial of dies of corona virus covid 19 case ended by chennai high court