New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project13.jpg)
தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களிடம் மிரட்டல் விடுப்பது போன்று பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் பூஜாகோயல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டேஜங் மொபாட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் பூஜாகோயல் தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறுயுள்ளார்.
ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையும் முன் தங்களால் வெளியேற முடியாது என மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிலத்தின் உரிமையாளர் பூஜாகோயல் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா உடன் சென்று நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோவில், எம்எல்ஏ ராஜா தனியார் நிறுவன ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளில் பேசி திட்டுகிறார். ஒரு அதிகாரியிடம் நீ யாருனு தெரிந்து தான் வந்துருக்கேன் எனக் கூறுகிறார்.
பதிலுக்கு நிறுவன அதிகாரி, உங்க கட்சி ஆளுக்கே நீங்க மரியாதை கொடுக்கல. நான் தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கிறேன் என அவர் கூறுகிறார். இதனால் கோபமடைந்த எம்எல்ஏ மேலும் திட்டி மிரட்டுகிறார். கை, கால் உடைத்துவிடுவேன் என்கிறார். நிறுவனத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து எம்எல்ஏ ராஜா கூறுகையில், "என் நண்பருடன் நானும் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்றேன். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அந்த வீடியோவில் அவர்கள் பேசியதை கட் செய்துவிட்டு வெளியிட்டுள்ளனர். எங்களை அனுமதிக்க மறுத்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசினர்" என்று கூறினார்.
இந்தநிலையில், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.