/tamil-ie/media/media_files/uploads/2023/08/tank-broken-1.jpg)
குடிநீர் தொட்டியை உடைத்த தி.மு.க பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
திருச்சி வரகனேரி பகுதியில் வீட்டு அருகே இருந்த மாநகராட்சி குடிநீர் தொட்டியை உடைத்த தி.மு.க பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டு அருகே மாநகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ரவி, காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கருணாகரன், வரகனேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், மலைக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வைத்திருந்த குடிநீர் தொட்டியை திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த குடிநீர் தொட்டியை இடித்த திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை வேண்டி, திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.