/indian-express-tamil/media/media_files/s40ndAq0xUPtcs14NnQW.jpg)
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவு
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு வியாழக்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர். முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு முன்பு வியாழக்கிழமை (14.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு பொதுப்படையாக உள்ளதாகவும், முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை பெறாததால், பாதிக்கப்பட்டதாக விண்ணப்பித்தால் அதை குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.