/indian-express-tamil/media/media_files/2025/04/14/LOrcG47oP7L53ZMh5X6Z.jpg)
தமிழக பா.ஜ.க-வின் தலைமை மாற்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க திரும்பி இருப்பது பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அ.தி.மு.க-வின் விருப்பத்தின் பேரில் இளம் மற்றும் கவர்ச்சியான பா.ஜ.க தலைவரான அண்ணாமலை மாற்றப்பட்டாரா? அல்லது கூட்டணியின் முன்நிபந்தனையாக மாற்றப்பட்டாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. புதிய தமிழக பா.ஜ.க தலைவரான நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க ஆட்சியின் போது முன்னாள் அமைச்சராக இருந்தவர். தமிழகத்தின் தென்மாவட்டமான திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக தற்போது பதவி அவர் வகிக்கிறார். 2016-ஆம் ஆண்டில் அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தவர் நயினார் நாகேந்திரன்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Will new caste equations, consolidation of Hindu votes help NDA win Tamil Nadu back?
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையே சுமூகமான உறவு இல்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அண்ணாமலை நல்லுறவில் இல்லை. இந்தச் சூழலில், தமிழக பா.ஜ.க-வின் தலைமை மாற்றம், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்படக்கூடிய உள்கட்சி பூசலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகத் தெரிகிறது. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற சில கட்சிகளும் இந்தக் கூட்டணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு சவாலாக அமையுமா?
இலங்கை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது, 2ஜி அலைக்கற்றை வழக்கு, சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கு மற்றும் ஊழல்கள் எனப் பல பிரச்னைகளால் கடந்த 2011-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையேயான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சரிவை சந்தித்தது. 2016-ஆம் ஆண்டில் அனைத்து கூட்டணி கட்சியினரையும் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக் கூறிய ஜெயலலிதாவின் நிர்பந்தம் மற்றும் மூன்றாவது அணி தோற்றம் ஆகியவை, வெற்றி வித்தியாசத்தை 1 சதவீதத்திற்கும் குறைவான அளவில் குறைத்தது. விஜயகாந்தின் தே.மு.தி.க, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும்.
2016 தேர்தலுக்குப் பிறகு, வலுவான கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்ட ஸ்டாலின், உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பல வெற்றிகளைப் பெற்றார். 2021-ல் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தது. வரலாறு காணாத வகையில், தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தி.மு.க வெற்றி பெற்றது. 1967, 1971, 1984, 1991, 1996 மற்றும் 2011 தேர்தல்களில், வாக்கு வித்தியாசம் சுமார் 10 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பலவீனமான அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்திருந்தாலும், கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல் ஆகியவை இருந்தும் கூட 2021 தேர்தலில் இதன் வித்தியாசம் சுமார் 6.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தப் பின்னணியில், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக அமைந்தால், 2026 தேர்தல் கடுமையான போட்டியாக இருக்கும். ஆனால், நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட்டால், அரசியல் கட்சிகளின் வாக்குகள் பிரிவது உறுதி.
முக்குலத்தோர் என குறிப்பிடப்படும் மூன்று ஆதிக்க துணை சாதிகளின் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான பா.ஜ.க.-வின் தெற்கு வியூகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமானது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையின் கொங்கு வேளாளர், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் முக்குலத்தோர், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., ஆகிய கட்சிகள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கொங்கு வேளாளர் சாதி ஆதிக்கமாக உள்ளது. மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் வன்னியர்கள் வலுவாக உள்ளனர். மாநிலத்தின் தெற்குப் பகுதியில் முக்குலத்தோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அ.தி.மு.க-வின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்தாலும் மாநிலத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வலுவான நிலையில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் தென்பகுதியில் குறிப்பிடத்தக்க இடத்தை அ.தி.மு.க இழந்துள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற பா.ஜ.க-வின் வியூகம் முக்குலத்தோரின் ஆதரவைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி செயல்படுகிறது. காங்கிரஸ் அறுவடை செய்து வந்த தேசியவாத வாக்குகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் சீரமைக்கப்படுமா? இந்தத் தேர்தலை தேசியவாதத்திற்கும், துணை தேசியவாதத்திற்கும் இடையிலான போட்டியாக வடிவமைக்க முடியுமா?
காமராஜர் தலைமையிலான காங்கிரஸை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, இந்த விவாதத்தில் தலைசிறந்து விளங்குகிறது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற சாதிய நடுநிலைத் தலைவர்கள் தேசியம் மற்றும் மாநிலம் அல்லது காஸ்மோபாலிட்டன் மற்றும் வட்டார மொழிப் பண்புகளின் இந்த இருமையை உடைக்க பயன்பட்டனர். தி.மு.க., சிறுபான்மையினரை தங்களுக்குள் கொண்டு வர அவர்களின் மதச்சார்பற்ற தகுதியை முன்னிலைப்படுத்தியது. இந்த நம்பகமான ஃபார்முலா இந்த முறையும் வேலை செய்யுமா? அ.தி.மு.க-வுக்காக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமியின் வியூக சமரசத்திற்கும், பா.ஜ.க-வின் நலனுக்காக அண்ணாமலையின் தனிப்பட்ட தியாகத்திற்கும், தமிழக மக்களால் பரிசளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Sudarsan Padmanabhan
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.