மே தினம், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாநகர தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன், மண்டல தொமுச பொதுச்செயலாளர் ஜோசப் நெல்சன் ஆகியோர் முன்னிலையில், திருச்சி சுப்பிரமணியபுரம் கலைஞர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த மே 1 தின நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, பகுதி திமுக செயலாளர் மணிவேல் மற்றும் மாவட்ட மாநகர, நகர , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது; இந்த சமுதாயத்திற்காக உழைக்க கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கும், ஒவ்வொருவரும் அந்தந்த சமூகத்திற்காக ஒவ்வொரு வகையிலும் உழைத்து வருகின்றனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துகளை, தொழிலாளர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ்,
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவித்திருக்கிறது என்ற கேள்விக்கு? தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார். எப்பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு ஆரம்பிக்கும், எப்பொழுது முடிவடையும் என்று இல்லாமல் அறிவிப்பை ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறார்கள். பீகாருக்கு அடுத்து தேர்தல் வர உள்ளது, 5 மாநில தேர்தலும் வரவுள்ளது. இந்த தேர்தல் காலம் முடியும் வரை இதுபோல் பலவிதமான அறிவிப்புகளை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். அறிவிப்பு அறிவிப்பாக இருக்க கூடாது, அதனை செயல்படுத்த வேண்டும். அது வரும் பொழுது தமிழக முதல்வர் எதற்கும் தயாராக இருப்பார்.
பள்ளி திறப்பு குறித்த கேள்விக்கு?
தமிழகத்தில் இப்போது கோடை காலம். ஏப்ரல் மாதத்திலேயே 104 டிகிரி வெயில் உள்ளது. ஜூன் மாதம் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதே நேரம் அன்றைய தினம் வெயில் குறித்து தமிழக முதல்வர் அலுவலகம் என்ன சொல்லுகிறதோ அதன்படி, மாணவர்கள் நலன் கருதி உரிய நேரத்தில் முடிவெடுத்து பள்ளிகள் திறக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வாங்கப்படுகிறது என்ற கேள்விக்கு?
தனியார் பள்ளிகள் அதிகம் அளவு கட்டணம் வாங்க கூடாது, அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ, அது நிர்ணயித்திருப்பதை காட்டிலும் அதிக படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
2026-ல் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக கூட வராது என்று தமிழக வெற்றி கழகம் விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு? அது அவருடைய எண்ணம், கட்சி ஆரம்பித்தால் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் மட்டும் தான் எதிர்க்கிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராம் கூறி உள்ளார் என்ற கேள்விக்கு? தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது இல்லாமல் பல்வேறு சரத்துக்கள் உள்ளது. இடைநிறுத்தம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இடைநிறுத்தல் அதிகப்படுத்தும் வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு என்று தெரிவித்துள்ளோம். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8, மூலமாக குழந்தைகள் இடைநிறுத்தல் அதிகமாக இருக்கும், ஆசிரியர்களை வஞ்சிக்கக்கூடிய, மாணவர்கள் நலம் சார்ந்த வஞ்சிக்ககூடிய பல கருத்துக்கள் அதில் உள்ளது.
நாம் இருமொழி கொள்கையில் நம்மை நிரூபணம் செய்துள்ளோம். மும்மொழி கொள்கை ஒன்பது ஒரு ஃபெயிலியர் சிஸ்டம் அதை பின்பற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது. 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்புக்காக காத்துள்ளோம், தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக பணியிடங்கள் நிரப்பப்படும்.
கூட்டணியில் வேறு கட்சிகள் இனைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு? தமிழக முதல்வர் தலைமைக் கழகம் எடுக்க வேண்டிய முடிவு என தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் பாலக்கரை பி.ஜே.பி. மண்டல இளைஞர் அணி பொதுச் செயலாளர் பி. விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பாஜகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்