திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. வயது காரணமாக இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை 28ம் தேதி, திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இரத்த அழுத்தம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல் மீண்டும் இயக்கம் பெற்று நிலையானது. அதன்பின், 29ம் தேதி, கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. மீண்டும் தீவிர சிகிச்சை காரணமாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இருப்பினும், அவரது வயது காரணமாக, அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தே சிகிச்சை பெற வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராகுல் காந்தி வருகைக்கு பிறகு, அவர் கருணாநிதி சிகிச்சை பெறும் அறையில் நேரடியாக சென்று உடல்நலம் விசாரித்தது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில், கலைஞர் கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிந்தது. அவர் கண் திறந்து பார்ப்பது போன்றும் அந்த புகைப்படம் இருந்தது. இதனால், தொண்டர்கள் உற்சாகத்தில் காணப்பட்டனர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனை நிர்வாகமே, கருணாநிதியின் உடல்நிலை சீராகிக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த திமுக தொண்டர்கள், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.