/indian-express-tamil/media/media_files/Mtnmp18gJ9W5pDPERKts.jpg)
கர்நாடகா பந்த் எதிரொலி: தமிழக எல்லையில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகள் - தமிழக அரசு அறிவிப்பு
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக செப்டம்பர் 29 செப்டம்பர் 2023 வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் பந்த் நடைபெறுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 28-ம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே கர்நாடகா தமிழக இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நள்ளிரவுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடகா புறப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் தமிழக எல்லையான ஓசூர் பேரூந்துநிலையத்திலேயே நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னை மோசமடைந்து வருகிறது. 18 நாட்களுக்கு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 3000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை குழு உத்தரவிட்டிருந்தது.
காவிரி மேலாண்மை குழு உத்தரவை -ஏற்க முடியாது என்றும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு இது குறித்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் செல்ல தயார் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி கர்நாடகாவில் பல அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் செப்டம்பர் 29-ம் தேதி பந்த் நடைபெறுவதால், கர்நாடக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு இரு சக்கர வாகனங்களும், சரக்கு வாகனங்களும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் தமிழகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் பொழுது ஓசூர் எல்லையோடு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.