காவிரி மேலாண்மை வாரியம் கோரி திமுக - தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி நடத்தினர். புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சையில் வைகோ கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இது தொடர்பான செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி நடத்தினர். அதன் LIVE UPDATES
மாலை 6.00 : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போராட்டத்தில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வதாக கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயம் அருகே மனித சங்கிலியில் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், சல்மா உள்ளிட்டோர்.
மாலை 5.45 : புதுக்கோட்டையில் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மாலை 5.25 : புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட மனித சங்கிலியில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் தவிர பல்வேறு விவசாய சங்கங்களும் கலந்து கொண்டன. சுமார் 5 கி.மீ தொலைவுக்கு அவர்கள் அணிவகுத்து நின்றனர். திறந்த ஜீப்பில் சென்று அவர்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் மனித சங்கிலியில் துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோர்.
மாலை 5.00 : வேலூரில் மனித சங்கிலியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 : சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு கனிமொழியுடன் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் சல்மா ஆகியோர் கைகோர்த்து நின்றனர்.
மாலை 4.10 : புதுக்கோட்டையில் ஸ்டாலின், தஞ்சாவூரில் வைகோ, சிவகங்கையில் கே.ஆர்.ராமசாமி, திருவாரூரில் முத்தரசன், சென்னையில் கே.பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரியில் திருமாவளவன், திருச்சியில் ஜவாஹிருல்லா, பெரம்பலூரில் காதர் மொய்தீன் ஆகியோர் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
மாலை 4-00 : சென்னை, தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் மனித சங்கிலி நடந்தது. அப்போது நிருபர்களிடம் பேசிய கனிமொழி, ‘தளபதி அறிவிப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பாஜக-அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றால், அவற்றால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. தமிழர்களை நோக்கி சுடுவதாகத்தான் அந்தத் துப்பாக்கிகள் இருக்கின்றன’ என்றார்.