New Update
/indian-express-tamil/media/media_files/5rTq2yLc5KVPcuCO0iJC.jpeg)
Cauvery river floods
இன்று (ஆக.3) காலை கீழணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Cauvery river floods
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கீழணையை வந்து அடைந்துள்ளது.
ஒன்பது அடி தண்ணீரை மட்டுமே கீழணையில் தேக்க முடியும் என்பதால் கீழணையில் இருந்து நேற்று (ஆக.2) காலை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும், வினாடிக்கு 2 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியாரு ஆகியவற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆக.3) காலை கீழணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்ககரை ஜெயங்கொண்ட பட்டினம், கீழ குண்டலவாடி கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் இந்த கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை பகுதியில் சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் அணைக்கரை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் ரமேஷ், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உபரி நீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காவிரி கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டாலும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை பகுதிகளில் ஆறுகள் வறண்டு கிடப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.