/indian-express-tamil/media/media_files/RbZkVGoSyontU2ansWbQ.jpg)
Cauvery River
’காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை’ என நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,’அரவக்குறிச்சி பகவதியம்மன் கோயில் மார்கழி திருவிழாவின் போது, அரவக்குறிச்சி ஆவுடையார் பாலம் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து வர சென்ற எனது மகன் பிரபாகரன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
காவிரி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் எங்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
பிள்ளைகளை இழந்து வாடும் எங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும், என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் கதையில் வரும் காவிரி ஆறு போல தற்போது காவிரி ஆறு உள்ளதாக நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை. மணலும் இல்லை.
கடந்த வருடம் மட்டுமே ஆற்றில் தண்ணீர் ஓடியது.
இந்த வழக்கில் புனித நீராடும் போது நீரில் முழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையை 4 வாரத்தில் வழங்க வேண்டும்’, என நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.