காவிரி நீர் பங்கீடு தீர்ப்பு குறித்து கர்நாடக அமைச்சர் சித்தரமையா தலைமையில் வரும் 7 ஆம் தேதி பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு தொடர்பான தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 175.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிரருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் கடந்த 22-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரை விவசாயிகளுடன் இணைந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திக்க வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த சந்திப்பிற்கு, தற்போது வரை, பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்காத நிலையில், தமிழகத்தைப் போலவே கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி படுக்கை பகுதி எம்.எல்.ஏக்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.