திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரி ராஜா. இவர் 10 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் ஓராண்டு வேலை பார்த்து வந்தார். இதைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வெப்சைட்டுகளில் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பல கோடி சம்பாதித்து வந்துள்ளார். இது குறித்து மத்திய உளவுத்துறைக்கு தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தியது. ராஜா பயன்படுத்திய இணையதள முகவரி, அவர் பதிவேற்றம் செய்துள்ள வெளிநாட்டு இணையதளங்கள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ராஜா வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் முடிவு செய்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து
பூமாலைப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் டெல்லி மற்றும் சென்னையிலிருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர், தமிழக போலீஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப், ஹார்டுடிஷ்க் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
சோதனை குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து ராஜா பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் பதிவேற்றத்தில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்தது யார், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இதற்கு ஏஜென்டாக இருந்தது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். மேலும் நேற்று ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, படங்கள், வீடியோக்களை ராஜா ஜெர்மனுக்கு அனுப்பிய தகவல்கள், அந்நாட்டில் உள்ள இன்டர்போல் அமைப்பு மூலம் பெறப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ராஜா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்