திருச்சி விமான நிலையம் மூலம் நடைபெறும் தங்கக் கடத்தலை தடுக்க சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையம் சோதனையால் பரபரப்பு:
திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் தொடர் சோதனையால், பல கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தங்க கடத்தலில் விமான நிலைய ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், சிபிஐ போலீசார் அதிரடி ஆய்வில் இறங்கியுள்ளனர். கடந்த 4 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தங்கம் கடத்தலில் மலிண்டோ விமான நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் இருவரும், தனியார் பயணிகளின் உடைமைகளை கையாளும் நிறுவனத்தைச் சோ்ந்த 2 போ் என 4 போ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே தங்க கடத்தலை தவிர்க்கவும், தடுக்கவும், சென்னையில் இருந்து வந்த 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விமானநிலையத்திற்குள் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த பயணிகள், மற்றும அவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடைபெற்றது.