தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கினர்.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக, 'இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.