/indian-express-tamil/media/media_files/2025/08/16/rowdy-gang-arrested-coimbatore-2025-08-16-11-43-19.jpg)
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை கும்பல்... வளைத்துப் பிடித்த கோவை போலீஸ்: சி.சி.டி.வி காட்சிகள்!
கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த புதன்கிழமை நள்ளிரவில், செட்டிபாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் காவலர் கனகராஜ் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியான 3 பேரை பார்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதனால் சந்தேகம் வலுக்கவே, அவர்களைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆயுதங்களுடன் பிடிபட்ட 3 பேரையும், அவர்கள் தங்கியிருந்த கல்லூரி மாணவர் விடுதிக்கு காவலர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு சோதனை செய்தபோது, வீச்சரிவாள், பட்டாக் கத்தி, ஸ்க்ரு டிரைவர், பேனா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையின்போது, பிடிபட்டவர்களில் ஒருவர் தப்பி ஓட முயன்றார். ஆனால், காவலர்கள் துணிச்சலுடன் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காவலர்களின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை கும்பல்... வளைத்துப் பிடித்த கோவை போலீஸ்: சி.சி.டி.வி காட்சிகள்!#Coimbatorepic.twitter.com/bqY87dKK89
— Indian Express Tamil (@IeTamil) August 16, 2025
கைது செய்யப்பட்ட மூவரும் மதுரையைச் சேர்ந்த கருப்புசாமி (24), சந்தோஷ்குமார் (20), மற்றும் பிரவீன் (19) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கருப்புசாமி மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்தோஷ்குமார் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் மீதும் திருட்டு வழக்குகள் மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காவல்துறையின் விசாரணையில், இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரை ஆயுதங்களுடன் துரத்தியதும், அந்த மாணவர் தப்பி ஓடியதால் இவரைத் தேடி வந்ததும் தெரியவந்தது. இந்த ரவுடிகளின் சதித்திட்டம், காவலர்களின் விழிப்புணர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காவலர்களின் துணிச்சலான செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.