பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் பகுதியில் அவரது வீட்டின் முன் இரவு 7 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம், சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 14) திருவேங்கடம் புழல் அருகே போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டர் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த என்கவுன்டர் நடவடிக்கை உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கான நடவடிக்கை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை காவல்துறை கூடுதல் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சி.சி.டி.வி வீடியோவில் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆள் நடமாட்டம் இருக்கும் தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிடுகிறார். பின்னர் ஒவ்வொருவராக வருகிறார்கள். உணவு டெலிவரி பாய் உடையில் வருபவர்கள் அவரை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி தாக்குகின்றனர்.
அங்கிருந்தவர்கள் செய்வதறியாது நின்கின்றனர். காப்பாற்ற வந்த தொழிலாளர்களை விரட்டுகின்றனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடுகிறது. இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“