தாம்பரம் அருகே மகளிர் விடுதியில் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மூன்று பெண்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
சென்னை மேற்கு தாம்பரம் பகுதி கடப்பேரி பகுதியில் ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கே தங்கியிருக்கிறார்கள்.
தாம்பரம் சானடோரியம் மேப்ஸ் வளாகத்தில் இருக்கின்ற தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கடப்பேரி பகுதியில் அறைகள் எடுத்து தங்கி இருக்கிறார்கள்.
இங்கு பெண்களும் பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார்கள். பெண்கள் விடுதி அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின் வயர்கள் செல்கிறது. அந்த கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கிரில்களை கழற்றி வைத்திருக்கிறார்கள்.
இன்று பெண் விடுதியில் ஜஹாகான்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் அந்த பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென மின்சாரம் தாக்கியதில், அவர் உடல் முழுவதும் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது கிரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணுக்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களும், மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்துள்ளனர். தற்போது அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் கடப்பேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மூன்று பெண்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அந்தப் பகுதியில் முழுவதுமாக தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
மேலும், அந்த பெண்கள் விடுதி உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதைக் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil