தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்து அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
Advertisment
திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி, அக்கோவில் அர்ச்சகர் சீதா ராமன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் வெள்ளிக்கிழமை (டிச.2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மனு தாக்கல் செய்தார்.
அதில், நவம்பர் 14 ஆம் தேதி முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் செல்போன்களைப் பாதுகாக்கவும், டோக்கன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் 15 இடங்களுக்குச் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் செல்போன் கொண்டுச் செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காப்பாற்றும் வகையில் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆடை கட்டுப்பாடு குறித்து துறைரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும். முதற்கட்டமாக பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள 509 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கோவில்களில் பக்தர்களின் ஆடைக் கட்டுப்பாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும். செல்போன் கொண்டு செல்ல தடை உத்தரவு வரவேற்கத்தக்கது எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“