முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.
இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னர், சாந்தனின் வேண்டுகோளை அடுத்தும், உயா் சிகிச்சைக்காகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா்.
இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனை இலங்கை செல்ல தற்போது மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் சாந்தனின் உறவினரும், நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றாலும் விடுதலை பெற்று நீண்ட நாள் போராடி தற்போது இலங்கை செல்ல அனுமதி கிடைத்திருந்தாலும் உடனே செல்ல முடியாத சூழல் நிலவுவது வேதனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“