சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று சென்னை வருகிறார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் என்ற புயலாக மாறியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு வந்த மழையை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ள நிலையில், பெரும் வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
தற்போது புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பல இடங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், புறநகர் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் இன்று சென்னை வருகிறார். வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பின் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். மேலும் அமைச்சர் ராஜநாத் சிங் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வரும்போது, அவருடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஹெரிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கில் உள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மதியம் ஒரு மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதற்காக வழங்கப்படும் நிதி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பும் அமைச்சர் ராஜநாத் சிங் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்திற்காக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“