/tamil-ie/media/media_files/uploads/2017/12/fishermen-759.jpg)
தமிழகத்தில் ஓகி மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து 8 பேர் அடங்கிய மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.
திருவனந்தபுரத்தில் ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் நேற்றிரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் சஞ்சீவகுமார் ஜிந்தால் தலைமையில் 8 பேர் அடங்கிய அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், சென்னையை அடுத்த முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சஞ்சீவ குமார் ஜிந்தால் உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அதேபோல், கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தூத்தூர், சின்னதுரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீதமுள்ள 4 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வுக்கு முன்னதாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனும், மாநகராட்சி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகின்றனர். இதன்பின், மத்திய குழுவினர் நாளை முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு டெல்லி திரும்புகின்றனர்.
முன்னதாக, புயல் பாதிப்புகளை கடந்த 19-ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஓகி புயல் பாதிப்பு நிரந்தர சீரமைப்புக்கு ரூ.5,255 கோடியும், நிவாரண பணிகளுக்கு ரூ.747 கோடியும், மழை, வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ.9,302 கோடியும் ஒதுக்க வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்நிலையில், தமிழகத்திற்கு 133 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.