/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-nimmy-2025-09-29-22-20-16.jpg)
கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து வேதனையுடன் பேசினார்.
"கரூரில் நடந்தது ஒரு அதிர்ச்சி சம்பவம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இந்த நெரிசல்," என்று அவர் தனது வேதனையைப் பதிவு செய்தார். பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதைப் பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை. மிகவும் பரிதாபமான நிலைமை," என்று நிர்மலா சீதாராமன் உருக்கத்துடன் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, கரூர் வருவதாக முதலில் கூறியிருந்தார். ஆனால், "பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆகவே மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்துள்ளோம்," என்று அவர் விளக்கமளித்தார். இந்தச் சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சி சார்பில் விமர்சனங்களை முன்வைக்க நான் வரவில்லை என்று அவர் தெளிவாகத் தெரிவித்தார்.
"யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்," என்று அவர் உறுதியளித்தார். இனி இதுபோன்று ஒரு துயரச் சம்பவம் நாட்டில் நடக்கக்கூடாது என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.