Advertisment

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்; தி.மு.க, என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க.,வின் அரசியல் சிக்னல்

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்; தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அரசியல் சிக்னல் அனுப்பும் பா.ஜ.க

author-image
WebDesk
New Update
stalin modi metro

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் நரேந்திர மோடி. (கோப்பு படம்)

Arun Janardhanan

Advertisment

செப்டம்பர் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஒரு வாரத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்து, மத்திய நிதியுதவியை வழங்க மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Behind Centre’s nod for Chennai Metro II, signal to NDA allies and DMK

63,246 கோடி ரூபாய் செலவில் 128 நிலையங்களுடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.9 கிமீ நீளமான பாதைகளை சுமுகமாக செயல்படுத்த மத்திய அரசின் நிதியுதவி உதவும். இரண்டாம் கட்டத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு ரூ.7,425 கோடியாக இருக்கும்.

அரசியல் காரணங்களுக்காக நிதியுதவி அனுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2020 இல் நாட்டினார்; 2021-22 பட்ஜெட்டில் மத்திய நிதியுதவி அறிவிக்கப்பட்டது, மேலும் திட்டத்திற்கான மத்திய செலவினம் மத்திய நிதி அமைச்சகத்தின் பொது முதலீட்டு வாரியத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 2021 இல் அங்கீகரிக்கப்பட்டது. பொது முதலீட்டு வாரிய அனுமதியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய அரசு இதுவரை பங்கேற்காதது மாநிலத்தை கடினமான நிதி நிலைமைக்கு ஆளாக்கியது, ஏனெனில் தமிழக அரசு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அறிவித்து அரசியல் ரீதியாக முன்னேற வேண்டியிருந்தது. முதலில் திட்டமிடப்பட்ட கூட்டு திட்டத்திற்குப் பதிலாக தமிழகம் அதை மாநில அரசுத் திட்டமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு நிதியளிப்பதற்கு மத்திய அரசு தாமதித்து வந்தது பா.ஜ.க மற்றும் தி.மு.க இடையே ஒரு மோதல் புள்ளியாக இருந்தது, தி.மு.க இதனை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு எதிரான ஒரு தெளிவான போக்கு என்று கூறியது.

வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை அனுமதியை தி.மு.க தலைமையிலான தமிழக அரசு வரவேற்றது, நிதி அனுமதிக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். தெளிவாக, மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே நீடித்து வரும் முட்டுக்கட்டையைத் தீர்ப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமான தி.மு.க.,வுக்கு மட்டுமல்ல, தேசிய அளவில் பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் இலக்காகக் கொண்ட ஒரு ஆழமான அரசியல் செய்தியையும் தெரிவிக்கிறது.

பா.ஜ.க தலைவர்கள் இப்போது இந்த முடிவு பா.ஜ.க கட்சிக்கும், மத்திய அரசு மீது மோதல் போக்கை கடைபிடித்து வரும் தி.மு.க.,வுக்கும் இடையிலான தீவிரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், பா.ஜ.க.,விடம் இருந்து ”அதிகம் எதிர்ப்பார்க்கும்” தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கட்சிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

உங்களுடனான எனது கடைசி சந்திப்பின் போது எங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். மாநில அரசியல் வட்டாரங்களில், தி.மு.க தலைவரின் எதிர்வினை மோடியிடம் "அசாதாரண அரவணைப்பைக் காட்டுவதாக" கருதப்பட்டது.

தமிழக ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை "மூலோபாயமானது" என்று அழைத்தார், இது பா.ஜ.க.,வை "எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுடன் கூட ஒத்துழைக்கிறது" என்று காட்டுவதாக அவர் கூறினார். “ஜே.டி(யு) தலைவர் நிதிஷ் குமாரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அதிக கோரிக்கை வைத்து வருவதால், இது தி.மு.க.,வுடன் நல்லுறவை ஏற்படுத்த உதவும், அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் கூட எங்களுக்கு நண்பர்கள் இருப்பதாகவும், அனைவரின் கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்க முடியும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு சமிக்ஞை செய்ய உதவும்” என்றும் அந்த தலைவர் கூறினார்.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 240 இடங்களை வென்று பெரும்பான்மைக்குத் தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதால், மோடி அரசாங்கம் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டையும் பெரும்பான்மைக்குச் சார்ந்துள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் முறையே 16 மற்றும் 12 இடங்களைப் பெற்றன.

தி.மு.க மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம், மோடி அரசின் இந்த முடிவு தி.மு.க ஆட்சிக்கு மட்டுமல்ல, மாநில மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று கூறினார்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் மத்திய அரசு அதன் பங்கை வெளியிட மத்திய அரசிடம் தி.மு.க மேற்கொண்ட முயற்சிகளை தி.மு.க.,வின் மூத்த அமைச்சர் ஒருவர் கோடிட்டுக் காட்டினார். “முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ட்வீட் அவர்கள் (மத்திய அரசு) நேர்மறையானவர்கள் என்பதற்கான முதல் தெளிவான அறிகுறியாகும். இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது, மேலும் ட்வீட்டை பதிவிடுமாறு அண்ணாமலையிடம் கேட்கப்பட்டிருக்கலாம்,” என்று அந்த அமைச்சர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கும் அண்ணாமலையின் ட்வீட்டிற்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது - இது தொனியிலும் நிலைப்பாட்டிலும் தலைகீழாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெறும் ரூ. 7,000 கோடியை எங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் ஏற்றுக்கொள்ளலாம், ஏனெனில் இந்த நிதியுதவி முற்றிலும் நடைமுறைக்கு உட்பட்டது. மேலும் இந்த தாமதம் முழுக்க முழுக்க அரசியல்தான்” என்று அமைச்சர் கூறினார்.

பிரதமர் மோடியுடனான ஸ்டாலின் சந்திப்புக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தற்போது வெளிநாட்டில் ஒரு கல்வித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள அண்ணாமலை, எக்ஸ் பக்கத்தில் பதிவில், மெட்ரோ திட்டத்திற்கு நிதியளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். ”மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள கணிசமான தாமதத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்திற்கு 50% பங்குத்தொகையை கூடிய விரைவில் வழங்க மத்திய அரசு தயவுசெய்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக மற்றும் தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்,” என்று அண்ணாமலை பதிவிட்டு இருந்தார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தை மாநில அரசுத் திட்டமாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதால், அதன் முழுச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சென்னையில் தெரிவித்திருந்தார். மத்திய பட்ஜெட் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் கூறும் மற்ற கதைகளை மறுதலிக்கவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

சென்னைக்கும், 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்ற கான்பூர் மற்றும் சூரத் போன்ற சிறிய நகரங்களுக்கும் இடையே மெட்ரோ திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் உள்ள வேறுபாடுகளை மேற்கோள் காட்டி, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் "அரசியல் உள்நோக்கம்" என்று தி.மு.க தலைவர்கள் முன்பு குற்றம் சாட்டினர்.

இப்போது மத்திய அரசின் முடிவு சில மாநிலத் தலைவர்களால் இரு முகாம்களுக்கு இடையேயான ஒரு "அமைதி நடவடிக்கையாகப்" பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு நிகழ்ச்சியில் மேடையைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து தி.மு.க மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “ஆளுநரின் அறிக்கைகளைப் பாருங்கள். சமீபத்திய லோக்சபா தேர்தலுக்கு முந்தைய நாட்களை விட தற்போது ஆளுநர் மாறிவிட்டார்,” என்று கூறினார்.

லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாநிலத்தை முழுவதுமாக கைப்பற்றியது, அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்வேறு விஷயங்களில் தி.மு.க.,வை குறிவைப்பதைத் தவிர்த்தார்.

மாநில அரசியல் வட்டாரங்களில் "அமைதிப்போக்கு இரு தரப்பினருக்கும் நன்றாக உதவுகிறது" என்ற கருத்து உள்ளது. “மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க கடுமையான தேர்தல்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், மம்தா பானர்ஜி ஒரு வல்லமைமிக்க எதிரியாகத் திகழ்ந்தாலும், தி.மு.க.,வுடன் இணக்கமான உறவைப் பேணுவதால், இந்தியா கூட்டணிக்குள் கூட கடுமையான எதிரிகள் இல்லை என்ற தோற்றத்தை பா.ஜ.க தக்க வைத்துக் கொள்ள முடியும்” என்று ஒரு அரசியல் பார்வையாளர் கூறினார். .

தமிழக பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில், மோடியை ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதி கேட்டு தனது சீட்டை கவனமாக விளையாடியுள்ளார். "ஆனால் நீங்கள் அதை ஒரு அமைதிப்போக்கு என்று அழைத்தால், நான் அதை இரு தரப்புக்கும் வெற்றி என்று அழைக்கிறேன்," என்று அந்த தலைவர் கூறினார்.

மற்றொரு மூத்த பா.ஜ.க தலைவர் கூறினார்: "நிச்சயமாக, நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளை நிர்வகிக்க முயற்சிக்கிறோம், இந்த நிதியை விடுவிப்பதன் மூலம், மத்திய அரசு மக்களின் நலன்களுக்கு சேவை செய்யும் போது எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களுடன் கூட வேலை செய்ய தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது."

ஆனால், பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பை தி.மு.க முகாம் நிராகரித்தது. "அத்தகைய கூட்டு ஒரு கற்பனை - அது தரை மட்டத்தில் சரிந்துவிடும். இது 1990 களில் நாங்கள் கூட்டணி வைத்திருந்தது அல்ல,” என்று தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Dmk Stalin Chennai Metro Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment