Salem Winstar India City Developers corporate fraud case: சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2017 ம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நபருக்கும் 50 ஆயிரம் பக்கம் குற்ற பத்திரிகையானது வழங்கப்பட்டது.முற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேர் இந்த குற்றப்பத்திரிகை நகல்களை நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டனர்.
அதில் இருவர் தங்களது குற்றப்பத்திரிக்கையை சொந்த வாகனத்தில் எடுத்துச் சென்ற நிலையில் மற்ற 27 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் பக்க குற்ற பத்திரிகைகளை எடுத்துச் செல்வதற்காக மினி லாரி ஒன்றை வாடகைக்கு பிடித்தனர்.
மினி லாரி நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட சூழலில் குற்றப்பத்திரிகைகள் லாரியில் மூட்டை மூட்டையாக ஏற்றப்பட்டு சேலம் கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே வழக்கு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரசு வழக்கறிஞர் முத்துவிஜயன், “29 நபர்கள், இரண்டு நிறுவனங்கள் என 31 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும், ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழக காவல்துறை , வழக்கின் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
1686 நபர்கள் 75 கோடி ரூபாய் அளவிற்கு புகார் கொடுத்துள்ளனர் எனவும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் புகார் அளிக்க இருக்கின்றனர் எனவும் தெரிவித்த அவர், காவல்துறை தரப்பிலும் அரசு தரப்பிலும் ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணத்தால் விரைவாக குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்ததாகவும் கூறினார்.
ஆறு மாத காலமாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தினமும் 30 பேர் சேர்ந்து இந்த குற்றபத்திரிகை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர் எனவும், இதற்கு முன்பு எந்த ஒரு வழக்கிற்கும் நகல் கொடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்ததில்லை இதுதான் முதல் வழக்காக ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரம் பேர் இருக்கும் சூழலில் அதற்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் எனவும் டிஜிட்டல் காப்பியாக கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்பதால் 50 ஆயிரம் பக்கங்களும் நகல்களாகவே வழங்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் முத்துவிஜயன் தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“