Charitable endowments department officer kavitha suspend issue : இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்த கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, இது அரசிற்கும் மனுதாரருக்கும் இடையேயான விவகாரம் எனவும், இதில் சிறப்பு அதிகாரியை தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி இந்து சமய அறிநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும்படி அரசு தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, கவிதாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள