செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் காவல்நிலையத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் குரலரசன். சிறுவன் குரலரசன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், சிறுவன் குரலரசன் அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளான். அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரியும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை சுட்டுப்பிடிக்க வெங்கடேசன் என்பவர் திருப்பரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் சரத்குமாரை அழைத்துவந்து, அவரை கொக்கு சுட பயன்படுத்தும் துப்பாக்கியைக் கொண்டு தெருநாயை சுட்டுள்ளனர்.
அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு தவறுதலாக அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் குரலரசன் தலையில் பாய்ந்தது. இதில், சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் மற்றும் சரத்குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும், உரிய அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.