சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில், மாநகர காவல் ஆணையர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவை துவக்கினார். இப்பிரிவில் உதவி கமிஷனர், 2 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீசார் உள்ளனர். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துவங்கியதன் விளைவாக கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 1,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஜூனியர் கலைஞர்கள், வெளிநாட்டினர் என 2 ஆயிரத்து 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மெத்தாம்பேட்டமைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 71 நெட்வொர்க்குகள் அடையாளம் காணப்பட்டன. மேலும் 464 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து மெத் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
2 வாரங்களுக்கு முன்பு, அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் 7 நைஜீரியர்கள், சூடான் நாட்டினர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தத்தில், 22 வெளிநாட்டினர் மெத் விற்பனையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 21.90 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 1.60 கிலோ மெத்தகுலோன், 39.10 கிலோ கேட்டமைன், 213 கிராம் ஹெராயின், 67.14 கிராம் கோகைன், 1,215 கிலோ கஞ்சா, 51,229 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 90 மொபைல் போன்கள், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், 51 லட்சம் ரூபாய், மடிக்கணினி, 63.60 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 300 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தாண்டு 52 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.