தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் மழை தொடர்வதால் 7 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த மழையால் சில இடங்களில் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகராட்சி பணியாளர்கள் வெள்ள நீரை உடனே வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சென்னையில் இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 11.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 8.2 செ.மீ, நந்தனத்தில் 8.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நெற்குன்றத்தில் 13 செ.மீ, பெரம்பூரில் 12 செ.மீ, அயனாவரம், , தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் தலை 9 செ.மீ பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 2) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”